வியாழன், டிசம்பர் 15, 2011

அணை உடைந்தால்... இந்தியா உடையும்! - ஆனந்த விகடன்


இந்த கட்டுரையை படிக்கும் யாருக்காவது மலையாள மொழியில் எழுதத் தெரிந்தால் எனக்கு எழுதி அனுப்பவும்.  அவர்களையும் இந்த கட்டுரையை படிக்கச் செய்வோம்.
bala.kentz@gmail.com



அணை உடைந்தால்... இந்தியா உடையும்!

சமஸ்
ஓவியம் : ஹரன்
எப்போதுமே மக்களிடம் சின்ன பொய்களைச் சொல்லி ஆள்வது கடினம். அதனால், பெரிய பொய்களைச் சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள்!''
- கோயபல்ஸ்
முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது என்ற பொய் முதன்முதலில் பத்திரிகையில் வெளியானது 1962-ல். மக்கள் அதைப் பொருட்படுத்தாதபோது, கேரள அரசு அதையே 1979-ல் பெரிய பொய்யாகச் சொன்னது இன்னொரு பத்திரிகை மூலம். அணையில் யானை புகும் அளவுக்கு வெடிப்புகள் ஏற்பட்டு இருப்பதாகவும், அணை எப்போது வேண்டுமானாலும் உடையலாம் என்றும், லட்சக்கணக்கானோர் உயிரிழப்பார்கள் என்றும் சொன்னது. இந்த முறை மக்கள் அதை நம்பினார்கள். கொந்தளித்தார்கள். இன்று வரை அந்தப் பொய்யே ஆள்கிறது.
உண்மை 1: அணை, நோக்கங்கள், லாபங்கள்!
ந்தியாவின் சராசரி மழை அளவு 1,215 மி.மீ. ஆனால், இந்த மழை அளவானது ஒரே மாதிரியானது அல்ல. உதாரணமாக, ராஜஸ்தானில் ஒரு பகுதியில் 100 மி.மீ மழை பொழியும். மேகாலயாவின் ஒரு பகுதியில் 11,500 மி.மீ. மழை பொழியும். இதேபோலதான், நதி நீர் வளமும். ஒருபுறம் தேவை. இன்னொருபுறம் விரயம். இந்த இரண்டுக்குமான இடைவெளியைக் குறைப்பதே சிறந்த நீர் நிர்வாகம். ஆங்கிலேயே அரசு முல்லைப் பெரியாறு அணையைக் கட்ட யோசித்தது இந்த அடிப்படையில் தான்.
தமிழகத்தின் பாசனப் பரப்பு நீரின்றிக் காய்ந்த அந்த நாட்களில், கேரளத்தின் நீர்வளம் வீணாகிக் கொண்டு இருந்தது. இங்கு பயிர் விளைந்தால், அங்கு அது உணவாகும் என்ற பார்வை ஆங்கிலேய அரசிடம் இருந்தது. அன்றைக்கு அணை கட்டப்பட வேண்டிய இடம் சென்னை ராஜதானியிடம் இருந்தது. அணையைச் சுற்றி இருக்கும் பகுதிகள் திருவாங்கூர் சமஸ்தானத்திடம் இருந்தன. அந்தப் பகுதிகளையும் ஆங்கிலேயர்களே எடுத்துக்கொண்டு, ஆறு லட்ச ரூபாயும் அஞ்சியோ, தங்கச்சேரி, பாலம் ஆகிய மூன்று பகுதிகளையும் தந்தால் போதும் என்று கேட்டது திருவாங்கூர் சமஸ் தானம். ஆங்கிலேயர்கள் நினைத்திருந் தால், 999 ஆண்டு குத்தகைக்கு அந்த இடத்தை எடுத்துக்கொண்டதற்குப் பதிலாக இதைச் செய்திருக்கலாம். ஆனால், தமிழர்களும் மலையாளிகளும் சார்ந்திருக்க வேண்டும் என்று அவர் கள் நினைத்தார்கள். இன்றைக்கும் நாம் அவ்வாறே சார்ந்திருக்கிறோம்!
முல்லைப் பெரியாறு அணையில் 155 அடி நீர் தேக்கப்பட்டால், தென் தமிழகத்தில் 2.23 லட்சம் ஏக்கர்கள் பாசனம் பெறும். 10 லட்சம் விவசாயிகள் பயன் அடைவார்கள். இந்தப் பாசனப் பகுதி முழுவதும் நெல் விளைவிக்கப்படுவதாகக்கொண்டால், அதிகபட்சம் அதன் விளைச்சல் 10 லட்சம் டன்களாக இருக்கலாம். கேரளத்தின் தேவை 50 லட்சம் டன்கள். இதில், வெறும் 10 லட்சம் டன்களை மட்டுமே கேரளத்தால் உற்பத்தி செய்ய முடிகிறது. எஞ்சிய தேவையில், பாதிக்கும் மேல் தமிழகத்தாலேயே பூர்த்தி செய்யப்படுகிறது. அதாவது, முல்லைப் பெரியாறு மூலம் பெறப்படும் விளைச்சலைப் போல, இரு மடங்கு நெல்லை நாம் அவர்களுக்குத் தருகிறோம். தவிர, காய் கனிகள், முட்டை, இறைச்சி என்று சகல மும் ஒவ்வொரு நாளும் 11 ஆயிரம் லாரி களில் தமிழகத்தில் இருந்து செல்கின்றன.
தமிழகத்தின் பார்வையில் இருந்து பார்த்தால், இது ரூ. 1,780 கோடி வணிகம். கேரளத்தின் பார்வையில் இருந்து பார்த்தால், அவர்களுக்கு உணவு அளிப்பவர்கள் தமிழர்கள். கேரளத்திடம் இந்தப் பார்வை இல்லாததே பிரச்னையின் அடிநாதம்!
உண்மை 2: அணையின் வரலாறும் பாதுகாப்பும்!
பென்னி குயிக்கால் 1886-ல் தொடங்கி 1895-ல் கட்டி முடிக்கப்பட்ட இந்த அணை, சுண்ணாம்புக் கலவையைக் கொண்டு கருங் கற்களால் கட்டப்பட்டது. நீர் அழுத்தம், அலைகளால் ஏற்படும் அழுத்தம், நில அதிர்வுகளால் ஏற்படும் தாக்கம் ஆகியவற்றை எதிர்கொள்ளும் உறுதிமிக்க புவிஈர்ப்பு விசை வடிவமைப்பின் அடிப்படையில் கட்டப்பட்ட அணை இது.
1979-ல் அணையின் பாதுகாப்பு விவகார மானபோது, கேரள மக்களின் அச்சத் தைப் போக்கும் நல்லெண்ண அடிப்படையில், அணையைப் பலப்படுத்த தமிழக அரசு ஒப்புக்கொண்டது. 1980-1994 காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வலுப்படுத்தும் பணி களின்போது, 1,200 அடி நீளம், 24 அடி அகலத்துக்குக் கிட்டத்தட்ட 12,000 டன் கான்கிரீட் கலவை அணையின் கட்டமைப்புடன் சேர்க்கப்பட்டது. 120 டன் சக்திகொண்ட எஃகுக் கம்பிகளால் அணை அடித்தளத்துடன் இறுக்கிக் கட்டப்பட்டது. மத்திய நீர்வள ஆணையத் தின் ஆலோசனைப்படி, புதிய வடிகால் மாடங்கள், மதகுகள் அமைக்கப்பட்டன. ஆக, பழைய அணையைப் போல மூன்று மடங்கு பலம் கூட்டப்பட்டது. இந்த உறுதித்தன்மை நிபுணர்களாலும் பல முறை ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டது. 1979-ல் தமிழகத்திடம் அணையைப் பலப்படுத்தச் சொன்னவர் அன்றைய மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவராக இருந்த கே.சி. தாமஸ். கேரளத்தைச் சேர்ந்த இவரே சமீபத்தில், ''அணையின் பாதுகாப்பு தொடர் பான அச்சம் அர்த்தமற்றது'' என்றார். 
உண்மை 3: கேரளத்தின் உள்நோக்கங்கள்!
''அணை இருக்கும் பகுதியில் சிறு நில அதிர்வுகள் அடிக்கடி ஏற்படுகின்றன. ஒருவேளை 6 ரிக்டர் அளவுக்குப் பூகம்பம் ஏற்பட்டால், அணை உடையும். அணை உடைந்தால், 35 கி.மீ. கீழே உள்ள இடுக்கி அணைக்கு 45 நிமிடங்களில் வெள்ளம் வந்து சேரும். இடுக்கி அணையையும் இடை யில் உள்ள சிறு அணைகளையும் அது உடைக்கும். இடுக்கி, கோட்டயம், ஆலப்புழை, எர்ணாகுளம் பகுதிகள் மூழ்கும். 35 லட்சம் பேர் உயிரிழப்பர். எனவே, பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120 அடிகளாகக் குறைக்க வேண்டும், இந்த அணையை இடித்துவிட்டு, புதிய அணை கட்ட அனுமதிக்க வேண்டும்!'' - கேரளத்தின் வாதம் இதுதான்.
முல்லைப் பெரியாறு அணை அமைந்து இருக்கும் இடம், கேரளம் அஞ்சுவதுபோல பெரிய நிலநடுக்கங்கள் ஏற்படும் பகுதி அல்ல. ஒரு வாதத்துக்காக அணை உடை வதாகவே கொண்டாலும், அணையில் இருந்து வெளியேறும் வெள்ளம் இடுக்கி அணையையே வந்தடையும். இடுக்கி அணை முல்லைப் பெரியாறு அணையைப் போல 7 மடங்கு பெரியது. இதற்கு இடையே குமுளி, ஏலப்பாறா பகுதிகள் மட்டுமே உள்ளன. அவையும் அணை இருக்கும் மட்டத்தில் இருந்து முறையே 460, 1,960 அடி உயரத்தில் உள்ளன. வெள்ளம் எப்படி மூழ்கடிக்கும்?
முல்லைப் பெரியாற்றில் கிடைக்கும் மொத்த நீரின் அளவு 4867 மில்லியன் கன மீட்டர். இதில் கேரளம் பயன்படுத்திக் கொள்வது 2254 மில்லியன் கன மீட்டர். கடலில் கலப்பது 2313 மில்லியன் கன மீட்டர். தமிழகத்தின் பங்கு - அணையின் நீர் மட்டம் 152 அடியாக இருந்தாலும் - 126 மில்லியன் கன மீட்டர்தான் (சுருக்க மாகச் சொன்னால், சற்றே பெரிய 4 குழாய் களில் தமிழகத்துக்குத் தண்ணீர் வருகிறது!) எனில், கேரளம் ஏன் எதிர்க்கிறது?
தங்களுடைய இடத்தில் உள்ள ஓர் அணையின் பயனை தமிழகம் அனுபவிப்பதைச் சகித்துக்கொள்ள முடியாத காழ்ப்பு உணர்வே கேரளத்தின் பிரச்னை. தண்ணீர் மூலம் உருவாகும் மின்சாரமும் தொழில் வளர்ச்சியுமே அதன் உள்நோக்கங்கள்.
புனல் மின்சார உற்பத்திக்கான கேந்திர முக்கியத்துவம் மிக்க பகுதி இது. கேரளத்தின் தொழில் வளர்ச்சியை மனதில்கொண்டு, நாட்டின் பெரிய நீர் மின் உற்பத்தி நிலை யத்தை இங்கு நிர்ணயிப்பது கேரள அரசின் நெடுநாள் கனவு. இடுக்கி அணைகூட அந்தக் கனவின் வெளிப்பாடுதான். நீர்வரத்தை அதிகமாகக் கணக்கிட்டு இந்த அணையைக் கட்டிவிட்டது கேரளம். 780 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் இலக்கோடு கட்டப் பட்ட இந்த மின் நிலையம், முழு அளவில் இயங்க விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் பாய வேண்டும். அது சாத்தியப்படவில்லை. முல்லைப் பெரியாறு அணை இல்லை என்றால், தமிழகத்துக்கு நீர் அளிக்க வேண்டிய தேவை இல்லை என்றால், அது சாத்தியம் ஆகும் என்று கேரளம் நினைக் கிறது. மேலும், சில மின் உற்பத்தித் திட்டங் களை அது மனதில் வைத்திருக்கிறது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 155 அடியாக இருந்தால், அதன் நீர்ப்பரப்பு 8,591 ஏக்கர். 136 அடியாக இருக்கும்போது அதன் நீர்ப் பரப்பு 4,678 ஏக்கர். தமிழகம் 8,000 ஏக்கர் பரப் பளவைக் குத்தகைக்கு எடுத்திருக்கிறது. ஆனால், அணையைப் பலப்படுத்தும் காலகட்டத்திலும் அதற்குப் பின்னரும் கேரளம் கொடுத்த தொடர் அழுத்தத்தின் காரணமாக, அணையில் 136 அடி வரை மட்டுமே நீரைத் தேக்கிவைக்கும் நிலை ஏற்பட்டது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட கேரளத் தொழிலதிபர்கள் பலர்
எஞ்சிய இடத்தை ஆக்கிரமித்தனர். ஏராளமான விடுதிகள், ரிசார்ட்டுகள் கட்டப்பட் டன. சுற்றுலா அங்கு பெரும் தொழி லாக வளர்ந்துள்ளது. நீர்மட்டம் உயர்த்தப்பட்டால், இந்தக் கட்ட மைப்புகள் காணாமல் போகும். கேரள அரசை இந்தப் பின்னணியும் இயக்குகிறது.
இவை தவிர, எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது விவகாரம் பெரிதாக்கப்படக் காரணம், கேரளத் தின் இன்றைய அரசியல் நிலை. வெறும் 3 இடங்கள் பெரும்பான்மை யில் சட்டசபையில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் அரசு, ஓர் இடைத்தேர்தலை எதிர்கொள்கிறது. இந்தத் தேர்தல் முடிவு காங்கிரஸுக்கு எதிராக அமைந்தால், ஆட்சி பறி போகும் சூழல் உருவாகும்.  முல்லைப் பெரியாறு அணை அரசியல் சூதாட்டத்தின் உள்நோக்கங்களில் இதுவும் ஒன்று.
உண்மை 4: உடையப்போவது அணை அல்ல!
காவிரியில் தனக்குள்ள பாரம் பரிய உரிமையை நிலைநாட்ட 17 ஆண்டுகள் வழக்காடியது தமிழகம். வழக்கறிஞர்கள் கட்டணமாக மட்டும்  1,200 கோடியைச் செலவிட்டது. இறுதித் தீர்ப்பு வந்தது. ஆனால், இன்னமும் தமிழகத்துக்கு நியாயமாகச் சேர வேண்டிய நீரைப் பெற முடியவில்லை.
முல்லைப் பெரியாற்றில், அணை பலமாக இருந்தபோதே, அணை யைப் பலப்படுத்த வேண்டும் என்று சொல்லப்பட்டதை ஏற்றுக்கொண் டது தமிழகம். அணையைப் பலப் படுத்தும் வரை நீர்மட்டத்தைக் குறைக்கவும் ஒப்புக்கொண்டது. இதனால், தமிழகத்தில் 38,000 ஏக்கர் தரிசானது. 86,000 ஏக்கர் நிலம் ஒருபோகச் சாகுபடியானது. பாசனப் பரப்பு குறைந்ததாலும் மின் உற்பத்தி குறைந்ததாலும் மட்டும்  4,200 கோடி இழப்பு ஏற்பட்டது. ஆனால், தமிழகம் இவ்வளவு இழப்புகளையும் சந்தித்து அணையைப் பலப்படுத்திய பின்னர், அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபோது, கேரளம் அதை ஏற்க மறுத்தது. சட்டசபையில் புதிய சட்டம் இயற்றி, அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக நிர்ணயித்தது. ''உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்படவில்லை எனில், உச்ச நீதிமன்றத்தின் புனிதத்தன்மை என்னவாகும்?'' என்று கேள்வி எழுப்பியது உச்ச நீதிமன்றம். ஆனாலும், இன்று வரை யாராலும் தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான தண்ணீரைப் பெற்றுத் தர முடியவில்லை. கடைசியாக, அணையையும் தமிழகம் இழக்கப்போகிறதா?
காவிரியோ, முல்லைப் பெரியாறோ வெறும் நதிகள் மட்டும் அல்ல. இந்தியாவில் தேசிய ஒருமைப்பாடு என்ற சொல்லுக்கு நேரடியான அர்த்தம் கொடுப்பவை இவைதான். கர்நாடகமோ, கேரளமோ தாக்குதல் நடத்துவது தமிழகத்தின் மீது அல்ல; நம்முடைய தேசிய ஒருமைப்பாட்டின் மீது தான்.
ஒரு மாதமாக இரு மாநிலங்கள் கொந்தளிக்கின்றன. அப்பாவிக் கூலித் தொழிலாளிகள் தாக்கப்படுகின்றனர். பக்தர்கள் விரட்டப்படுகின்றனர். பெண் கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப் படுகின்றனர். வாகனங்கள் அடித்து நொறுக்கப்படுகின்றன. கடைகள் சூறை யாடப்படுகின்றன. மாநில உணர்வு எங்கும் வியாபித்துக் கொப்பளிக்கிறது. வன்முறை நேரம் பார்த்துக்கொண்டு இருக்கிறது. பிரதமரே, நீங்கள் என்ன செய்கிறீர்கள்?
இனி செயய வேணடியது எனன?
 இரா.வெங்கடசாமி, நீரியல் மற்றும் வேளாண் பொறியியல் நிபுணர்.
''நதிகள் மீதான அதிகாரம் மத்திய அரசுவசம் இருக்க வேண்டும். தேசிய அளவில் நதி நீர் விவகாரங்களைக் கையாள முழு அதிகாரம் மிக்க தன்னாட்சி அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும். நதி நீர் விவகாரங்களை இந்த அமைப்பு கையாள வேண்டும். நாட்டில் நீர் வளம் உபரியாக உள்ள பகுதிகளைப் பட்டியலிட்டு, அங்குள்ள நீர் வளத்தை, தேவைப்படும் பிற பகுதிகளுக்குப் பிரித்து வழங்கி நிர்வகிக்கும் அதிகாரத்தை இந்த அமைப்புக்கு வழங்கும்படி நீர் வளப் பயன்பாட்டுச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர வேண்டும். இது பொதுவான தீர்வு.
முல்லைப் பெரியாறு அணையைப் பொறுத்த அளவில், தமிழக அரசு அணையைப் பலப்படுத்தும் பணியை மேற்கொள்ள மட்டும் 13 ஆண்டுகளை எடுத்துக்கொண்டது. அதேபோல, இந்தக் காலகட்டத்தில் தமிழகத்தின் குத்தகையில் இருந்த இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதையும் நம்முடைய அரசு கண்டுகொள்ளவில்லை. இன்று நமக்கு ஏற்பட்டு இருக்கும் பின்னடைவுக்கு இது முக்கியமான காரணம். இனி வரும் காலங்களில் இதை ஒரு பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
நீரியல் அளவுகள் ஏதுவாக இருக்குமாயின், தேக்கத்தில் இருந்து நீர் வெளியே செல்லும் கால்வாயின் ஆழத்தை இன்னும் 4 அடி அதிகப்படுத்தி, நீர்மட்டம் 100 அடியைத் தொட்டாலே, நீர் வெளியேறும்படி செய்ய வேண்டும்.
நீர்த் தேவையின் அத்தியாவசியத்தைப் பொறுத்து, நீர்த்தேக்கத்தில் இருந்து விசை பம்புகள் மூலம் நீரை இறைத்து கால்வாய்க்குள் செலுத்துவதற்கு அனுமதி பெற வேண்டும். தமிழகப் பகுதியில் கால்வாய்களை ஆழ, அகலப்படுத்துவதுடன் சிறு தடுப்பணைகளுக்கான சாத்தியங்களையும் ஆராய வேண்டும்!''


நன்றி
ஆனந்த விகடன்




நன்றி
பாலா



சனி, டிசம்பர் 10, 2011

பாரதி

டிசம்பர் 11 2011 பாரதியின் 130 வது பிறந்த நாள்.






’’தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?’’



பாரதி என்ற பெயரை உச்சரித்த உடன் நமக்கு உண்டாகும் பலவிதமான உணர்வகளை வெளிப்படுத்த சரியான ஒரு வார்த்தை கிடைக்கவில்லை.

தமிழ் மொழிக்கு புத்துயிர் அளித்து, புது சக்தியை ஊட்டியவன்.

என்னை போன்ற சாதரன மனிதனும் புரிந்து கொள்கின்ற வகையில் அறிவுக் கவிதைகளை அழகுத் தமிழில் அளித்தவன்.

ஜாதி ஒழிப்பு, பெண் விடுதலை,  மொழிப்பற்று போன்ற புரட்சி கவிதைகளை கொடுத்து  இனம், மொழி, சுதந்திரம், தேசம்  பற்றிய எழுச்சியயையும், மலர்ட்சியையும் ஏற்படுத்தியவன்.

பாரதியின் பிறந்த நாளை கொண்டாடுவோம். போற்றுவோம்.









திங்கள், டிசம்பர் 05, 2011

முல்லை பெரியாறு- பிரதமருக்கு வைகோ வின் கடிதம்

தமிழ் நாடு - கர்னாடகம் இடையே இருக்கும் காவிரி நதி நீர் பிரச்சனை போலவே, நீண்ட காலமாக தமிழகம்- கேரளா விற்கு முல்லை பெரியாறு. முன்பே புதிய அணை கட்டும் திட்டத்தில் இருக்கும் கேரளா அரசிற்கு  சமீபத்தில் வெளியான DAM-999 என்ற படத்தினை காரணம் காட்டி கேரளா அரசு புதிய அணையை கட்ட மிகவும் தீவிரம் காட்டி வருகிறது. இந்த பிரச்சனை பற்றி எழுத முயன்ற போது எனக்கு முல்லை பெரியாறு அணையை பற்றிய முழுமையான வரலாறு தெரியாது என்பதனால் எழுதாமல் இருந்தேன். அதனால் சமீபத்தில் வைகோ அவர்கள் பிரதமருக்கு எழுதிய முழுமயான கடிதம் படிக்க நேர்ந்தது அதை என்னுடய இந்த வலைப் பதிவில் பதிகிறேன்.




மாண்புமிகு டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,

வணக்கம்.

பொருள்:  முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக மத்திய அரசு எடுக்க வேண்டிய அவசர நடவடிக்கை - குறித்து.

முல்லைப் பெரியாறு அணை குறித்த தமிழக மக்களின் தீவிர அச்சத்தை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். கேரள அரசாங்கத்தின் ஆதரவோடு அங்குள்ள அரசியல்  கட்சிகளின் மோசமான, தீய எண்ணத்தோடும், சட்ட விரோத அச்சுறுத்தலோடு கூடிய நடவடிக்கைகள் முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.

2011-ஆம் ஆண்டு ஆகஸ்டு 2-ஆம் தேதி முல்லைப் பெரியாறு குறித்து நான் உங்களுக்கு ஏற்கனவே எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்த பின்வரும் பகுதிகளை நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.

“முல்லைப் பெரியாறு அணை 1895-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. சென்னை மாகாணத்திற்கும் திருவிதாங்கூர்-கொச்சின் அரசுக்கும் இடையே 1886-ஆம் ஆண்டு அக்டோபர் 29-ஆம் தேதி ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் 999 ஆண்டுகளுக்குத் தமிழ்நாட்டிற்கு முல்லைப் பெரியாறு அணையில் சட்டபூர்வமான உரிமை உள்ளது.

1976-ஆம் ஆண்டு கேரள அரசால் கட்டப்பட்ட இடுக்கி அணைக்குத் தண்ணீரைப் பெறுவதற்காக, 800 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக, சுயநலமிக்க குறுகிய எண்ணம் படைத்த சிலரால் முல்லைப் பெரியாறு அணை குறித்த பொய்யான எச்சரிக்கையைப் பரப்பி வருகின்றனர். அப்படி குறுகிய எண்ணம் படைத்தவர்களின் முயற்சியால் அணையின் தண்ணீர் தேக்கும் உயர அளவை 152 அடியிலிருந்து 136 அடியாகக் குறைத்து உள்ளனர்.

அதன்மூலமாக தமிழக மக்களுக்குச் சரிசெய்ய முடியாத இழப்பையும் இரண்டு இலட்சம் ஏக்கர் பாசனப் பகுதிகளுக்குத் தண்ணீர் வரத்தே இல்லாமல் செய்துள்ளார்கள்.

1979-ஆம் ஆண்டு கேரள அரசாங்கம் இந்த அணை தொடர்பாக அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. மத்திய தொழில்நுட்ப வல்லுநர்கள் அணைப் பகுதியைப் பார்iவியிட்ட பிறகு அணையின் நீர்மட்ட உயரத்தை முதற்கட்டமாக 145 அடிக்கு உயர்த்தலாம்; பிறகு 152 அடியாக உயர்த்தலாம் என்றும் அணையின் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லையென்று சான்று வழங்கியுள்ளார்கள்.

இரு மாநில அரசுகளின் கருத்துகளைக் கேட்ட பிறகு உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு 2006-ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி அணையின் நீர்மட்ட உயரத்தை 142 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என்றும், அணையின் பலத்தைக் கூட்டுவதற்குத் தமிழக அரசு எடுக்கின்ற நடவடிக்கைகளுக்குக் கேரள அரசு எந்தவிதமான முட்டுக்கட்டையும் போடக் கூடாது என்றும் அறிவுறுத்தியது.

உச்ச நீதிமன்றம் தெளிவான தீர்ப்பு வழங்கிய பிறகும், கேரள அரசாங்கம் சட்ட விரோத நடவடிக்கைகளில்  ஈடுபட்டுக் கொண்டு இந்தியாவின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கும் சவால் விடுகின்ற வகையில் நடந்து கொள்கின்றது.

2006-ஆம் ஆண்டு மார்ச் 16-ஆம் தேதியன்று கேரள சட்டமன்றத்தில் கேரள நீர்ப்பாசனம் மற்றும் தண்ணீர் சேமிப்புத் திருத்த மசோதா 2006 கேரள சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்டு 2006 மார்ச் 18-ஆம் தேதியன்று சட்டமாக அரசிதழில் வெளியிடப்பட்டது.

இந்தியா சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு முதன்முறையாக ஜனநாயக விரோத சட்டம் கேரளாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்தச் சட்டம் கேரள அரசாங்கத்திற்கு எந்தவொரு அணையையும் நீர்த்தேக்கத்தையும் உடைப்பதற்கான அதிகாரத்தை வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2003 வரை கேரளாவின் அணைகள் மற்றும் நீர்த் தேக்கங்களின் பட்டியலில் முல்லைப் பெரியாறு அணை இடம் பெறவில்லை. ஆனால், 2006-ஆம் ஆண்டு சட்டதிருத்த மசோதாவின் மூலமாகக் கேரளாவின் நீர்த் தேக்கங்கள் மற்றும் அணைகள் பட்டியலில் முல்லைப் பெரியாறு அணை முதலிடத்தில் சேர்க்கப்பட்டு  அணையின் முழுக் கொள்ளளவும் 136 அடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்தச் சட்டத்தில் கேரள அரசாங்கம் மிகவும் துணிச்சலாக நீர் ஆணையத்தின் நடவடிக்கையும், கேரள அரசாங்கத்தின் நடவடிக்கையும் இந்தியாவின் எந்த நீதிமன்ற வரம்புக்கும் உட்பட்டதல்ல என்ற ஒரு பிரிவும் இடம் பெறச் செய்துள்ளது. இது இந்திய அரசாங்கத்திற்கே கேரள அரசால் விடப்பட்ட சவால் ஆகும்.”

எங்களுடைய கவலைதோய்ந்த வேண்டுகோள் மத்திய அரசால் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டுள்ளது. இன்றைய தேதி வரை உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவினர் அணையின் உறுதித் தன்மையையும், பாதுகாப்பையும் ஆய்வு செய்த வண்ணம் உள்ளார்கள்.

உயர்ந்த தொழில்நுட்பத்தின் வாயிலாக அணையின் உறுதியைப்  பலப்படுத்துவதற்குத் தமிழ்நாடு அரசு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது என்பது உண்மையான செய்தியாகும்.

மூன்று முக்கிய நடவடிக்கைகள் பின்வருமாறு:

1)      கான்கிரீட் கலவை மூலமாக அணைக்குத் தொப்பி போன்ற பாதுகாப்பை உருவாக்குவது :

12,000 டன் கலவை மூலமாக அணையின் பலத்தைக் கூட்டி அதன் வாயிலாக எத்தகைய அழுத்தத்தையும்,

நிலநடுக்கப் பாதிப்பையும் தாங்குகின்ற வலிமையை உருவாக்கியுள்ளது.

2)      கம்பிவலத் தடத்தின் மூலம் நிலைக்கச் செய்வது :

ஆயத்த முறையில் தயாரிக்கப்பட்ட கான்கிரீட்டால் உருவாக்கப்பட்ட அமைப்பை நங்கூரம் போலப் பயன்படுத்துவது.

3)      கான்கிரீட் மூலமாக அணையின் அடித்தளத்தைப் பாதுகாப்பது :

அணையின் அடிமட்ட அகலம் 144.6 அடியிலிருந்து 200.6 அடியாக மாற்றுவது இந்தியாவில் எந்தவொரு அணைக்கும் இல்லாத சிறப்பாக அடித்தள அகலம் அமைந்துள்ளது. தொழில்நுட்ப வல்லுநர்களின் கருத்துப்படி அணை 7 ரிக்டர் அளவிற்கு நிலநடுக்கத்தைத் தாங்க வல்லது. ஆனால், நிலநடுக்கம் 5 ரிக்டர் அளவுக்கு மேல் அணை இருக்கும் பகுதியில் ஏற்பட வாய்ப்பில்லை. வாதத்திற்கு 7 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்படும் என்றுவைத்துக் கொண்டாலும் குமுளியிலும், குமுளியைச் சுற்றியுள்ள கட்டிடங்கள் இடிந்து  விழுந்தாலும் முல்லைப் பெரியாறு அணைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

இந்தக் கடிதத்துடன் காணொளிக் குறுந்தகடு ஒன்று இணைத்துள்ளேன். அதில் அணையின் உறுதித் தன்மை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அணையை வலுப்படுத்துவதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும் தகுதிவாய்ந்த தமிழ்நாட்டைத் சார்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பொறியாளர்களால்

தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால், கேரள அரசும் அங்குள்ள அரசியல் கட்சிகளும் அணை உடையப் போவதாகவும், அதனால் இலட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடும் என்ற உளவியல் ரீதியான பயத்தையும், பதட்டத்தையும் கேரள மக்கள் மனதிலே உருவாக்கி வருகின்றார்கள்.

இது ஒரு பொய்யான செய்தி. கேரள அரசாங்கம் அணையை உடைக்க முடிவெடுத்து விட்டது. அதற்காக 40 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாகவும், மத்திய அரசு அனுமதி அளித்தாலும் அளிக்காவிட்டாலும் புதிய அணை கட்டியே தீருவோம் என்று அறிவித்துள்ளது.

கேரள மாநிலத்தின் முதலமைச்சர் கடந்த 6 மாதங்களில் 22 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். ஆனால், அந்தச் செய்தி உண்மையல்ல. நான்கு முறைதான் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதுவும் முல்லைப் பெரியாறு அணை அருகில் ஏற்படவில்லை.

கேரள அரசாங்கம் புதிய அணையை ஏற்கனவே அணை இருக்கும் உயரத்தில் இருந்து கீழே தாழ்வான பகுதியில் கட்டத் திட்டமிட்டுள்ளது. அப்படிப்பட்ட இடத்தில் அணை கட்டும்போது கேரளாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட பெற முடியாது.

இப்பொழுதுள்ள அணை உடைக்கப்படுமேயானால் தமிழகத்தில் 2,17,000 ஏக்கர் நிலங்கள் பாசனத்திற்குத் தண்ணீர் கிடைக்காமலும், 85 இலட்சம் மக்கள் குடிதண்ணீருக்கும் வழியில்லாமல் அல்லல்பட நேரிடும். அதேநிலை தொடர்ந்து நீடிக்குமேயானால் தமிழகத்தின் தென்பகுதிகள் காலப்போக்கில் பாலைவனமாக மாற நேரிடும்.

மிகவும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய அக்கிரமச் செயல்களில் கேரளத்தினர் கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதியும், டிசம்பர் 4 ஆம் தேதியும் அணையை உடைக்க முயற்சித்துள்ளனர். ஒன்றாம் தேதி அன்று கேரளத்தினர் முல்லைப் பெரியாறு அணையை சேதப்படுத்த முயன்று அதனைத் தடுக்கப்போன கேரள மாநில போலீசாரையும்,

தாக்கியுள்ளனர். நேற்று டிசம்பர் 4 அன்று ஒரு வன்முறைக்கூட்டம் கடப்பாரையோடு, சம்மபட்டிகளோடு, இரும்புக் கம்பிகளோடு சென்று பேபி அணையை உடைக்க முயற்சித்துள்ளனர்.

இதனைப் தடுப்பதில் கேரள காவல்துறையை திணறிப்போயுள்ளது. அணையை உடைப்போம் என்று கேரள அரசே அறிவித்துவிட்டதால், அணையை கேரள போலீசார் பாதுகாக்க முடியாது. எனவே, முல்லைப் பெரியாறு அணையைப் பாதுகாக்க மத்திய ரிசர்வ் போலீஸ் படையை அங்கு குவிப்பதற்கு இந்திய அரசு உடனடி நடவடிக்கை

எடுக்க வேண்டும். இதனையே தமிழ்நாடு முதலமைச்சரும் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளர்.

தமிழ்நாடு, கேரளாவுக்கு உணவு தானியங்கள், பால், காய்கறிகள், கால்நடைகள் போன்றவற்றைக் கடந்த பல ஆண்டுகளாக வழங்கி வருகின்றது. முல்லைப் பெரியாறு அணை உடைக்கப்படுமேயானால் இரு மாநில மக்களிடையேயான சகோதர ரீதியான உறவுகள் பாதிக்கப்படும். அதன்வாயிலாக எதிர்பாராத பின்விளைவுகள்

ஏற்படும். இந்தியாவின் பரந்த நலன் கருதி நாட்டின் ஒருமைப்பாட்டைக் காப்பதற்கு மத்திய அரசு புதிய அணை கட்டும் கேரள அரசின் முயற்சியைத் தடுத்து நிறுத்த வேண்டும். பழைய அணையைப் பாதுகாக்க வேண்டும்.

தங்கள் அன்புள்ள

(வைகோ)