சனி, ஜனவரி 14, 2012

தைத் திருநாள் (பொங்கல்)

 நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.

பொங்கலோ பொங்கல்.......

பொன்னாய்ப் பூவாய்ப் பொலிந்த ஞாயிறே
உண்ணும் விழிகள் உவக்கும் ஓவியமே
முன்னைக்கு முன்னர் முளைத்த மூதொளியே
இந்நாள் மட்டும் இளமை மாறாமல்
புதிது புதிதெனப் போற்றும் பரிதியே
இந்நாள் புதுமையில் புதுமை இயற்றினாய்;
காலை மலரெடுத்துக் கட்டழகு கொட்டிக்
கோலக் கதிர்கள் குலுங்க நீலக்
கடல்மிசை எழுந்த கதிரின் செல்வனே
ஆடல் வாழிய அழகு வாழிய!
புத்தம் புதிய முத்தரிசி ஆய்ந்து
தித்திக்கும் பால் செம்மையின் அளாவ
அலரிச் செவ்விதழ் அவிழ்த்தன போல
இலகெரி அடுப்பில் ஏற்றிய பானை
பொங்கிடப் பொங்கலோ பொங்கல் என்றார்த்தே
புரையீர் வெல்லம் புலிப்பல் போன்ற
ஏலம் பருப்புச் சேலத்து நறுநெய்
நன்று சேர்த்துக் குன்றென இறக்கித்
தேன்பெய்து முக்கனி சேர்த்து விருந்துடன்
ஒக்கலும் மக்களும் உரிமையின் உட்கார்ந்து
இருள்நீக்கி எழுநன் எழுச்சி வாழ்த்தி
அருள்தேக்கு உழவர் வாழ்த்தி அத்தமிழ்
வாழ்வினை வாழ்த்தி வாழ்த்தி
மூழ்குவர் இன்பத்து முழுதுண்டு நன்றே!





                                                          - பாரதிதாசன்

                                                     

நீர்,நிலம்.காற்று,ஆகாயம்,சூரியன் ஆகிய இயற்கை சக்திகளுக்கும், நமக்காக உழைக்கும் கால் நடைகளுக்கும், அறுவடை காலத்தில் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்த தனது உறவினர்கள் அனைவரும் ஒன்றுகூடி கொண்டாட , உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கொண்டாடிய விழா இந்த தைத் திருவிழா.


மதங்களை கடந்து தமிழர்களால் கொண்டாடப் படவேண்டிய இந்த விழா சமத்துவ பொங்கல் என்ற புதுப் பெயரை சூட்டி கொண்டாடப் பட வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம்.

மதங்களை மறப்போம், மனிதனாக இருப்போம்......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக